காந்திநகர்,
ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்து வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி சுற்றாக விளங்கும் இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் 'ஸ்னாட்ச்' முறையில் 88 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 106 கிலோவும் என மொத்தம் 194 கிலோ எடை தூக்கினார். அவர் ஸ்னாட்ச் முறையில் வெள்ளிப்பதக்கமும், ஒட்டுமொத்தத்தில் வெண்க லப்பதக்கமும் வென்றார்.
சீனாவின் ஜின்லான் ஜாவ் 'ஸ்னாட்ச்' முறையில் 95 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோவும் என மொத்தம் 216 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். வியட்நாம் வீராங்கனை ஹோய் ஹூயோங் 'ஸ்னாட்ச்' முறையில் 87 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 108 கிலோவும் என மொத்தம் 195 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றுள்ளது. தொடக்க நாளில் இந்திய வீராங்கனை கோகம் கோஹர் (48 கிலோ) ஒரு வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.