ஹாங்சோ ,
ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை தொடரின் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கப்பதக்கமும், மனு பாக்கர் வெண்கப்பக்கமும் வென்று அசத்தினர்.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை (Rifle/Pistol/Shotgun) தொடரின் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஈஷா சிங் தங்கப்பதக்கத்தையும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.
இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட ஈஷா சிங் 40 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதேவேளையில், மனு பாக்கர் 28 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை வென்றார்.
வெற்றிக்கு பின்னர் பேசிய ஈஷா சிங், முந்தைய போட்டிகளில் பெற்ற வெற்றிகளால் தன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் அழுத்தத்தை வெற்றிகரமாக சமாளித்ததே இதற்கு காரணம் என தெரிவித்தார். மேலும், ஹாங்சோவின் சூழல் தனக்கு ஏற்கனவே பரிச்சயமானதாக இருந்தது போட்டியில் நம்பிக்கையுடன் செயல்பட உதவியதாகவும் கூறினார்.