புதுடெல்லி,
23-வது ஆசிய ஆசிய விளையாட்டு போட்டியை (2038-ம் ஆண்டு) நடத்துவதற்கான தனது விருப்பத்தை இந்தியா அதிகாரபூர்வமாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் சமர்ப்பித்துள்ளது. நாட்டை விளையாட்டு நிகழ்வுகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றும் யுக்தியில் இது குறிப்பிடத்தக்க நகர்வாகும்.
'இப்போதைக்கு இந்தியா மட்டுமே இந்த போட்டியை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் முதற்கட்டமாக விவாதித்துள்ளோம். இதை முன்னெடுத்து செல்ல அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சொல்வார்கள்' என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி ரகுராம் அய்யர் தெரிவித்தார்.
ஏற்கனவே 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்தியாவில் ஆமதாபாத்தில் நடக்க உள்ளது. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற முயற்சி நடக்கிறது. 2038-ம் ஆண்டு ஆசிய விளையாட்டை நடத்தும் உரிமம் கிடைத்தால் அதுவும் ஆமதாபாத்தில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது.