செங்கல்பட்டு,
உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரையில், சர்வதேச அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆகஸ்ட் 12-ந்தேதி(இன்று) தொடங்கியுள்ளது. உலக அலைச்சறுக்கு லீக் (WSL) அமைப்பின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தாய்லாந்து, ஸ்வீடன், அமெரிக்கா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இத்தொடரில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிர பதக்கங்கள் வழங்கப்படும். மேலும் இத்தொடரில் கலந்து கொண்டு புள்ளிகளை குவிக்கும் வீரர்கள், அதன் மூலமாக உலகளாவிய 'சேலஞ்சர் சீரிஸ்' போன்ற உயர்நிலைத் தொடர்களுக்குத் தகுதி பெற்று, அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுகளுக்கு முன்னேற இப்புள்ளிகள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.