புதுடெல்லி,
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.
இதில் 51 கிலோ உடல் எடைப்பிரிவு தான் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்த பிரிவின் இறுதி சுற்றில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஜூனியர் முன்னாள் உலக சாம்பியனான நிகாத் ஜரீனை நேற்று சந்தித்தார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன், மேரிகோமை அடிக்கடி வம்புக்கு இழுத்தவர் ஆவார். பெரிய சாதனையாளர் என்பதால் மேரிகோமுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது, அவரையும் தகுதி போட்டி நடத்தியே அணிக்கு தேர்வு செய்ய வேண்டும். அனைத்து போட்டியாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். அவரை என்னுடன் மோத வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியதுடன், மத்திய விளையாட்டுத்துறைக்கும் கடிதம் எழுதினார்.
இத்தகைய சூழலில் இருவரும் கோதாவில் இறங்கியதால் மைதானத்தில் ஒருவித பரபரப்பு நிலவியது. ஆனால் சரமாரியாக குத்துகளை விட்டு எதிராளியை கலங்கடித்த அனுபவம் வாய்ந்த மேரிகோம் 9-1 என்ற கணக்கில் எளிதில் நிகாத் ஜரீனை சாய்த்து இந்திய அணியில் இடத்தை உறுதி செய்தார். இருப்பினும் கோபத்தில் காணப்பட்ட மேரிகோம், ஆட்டம் முடிந்ததும் அவருடன் கைகுலுக்கிக் கொள்ள மறுத்தார். மேலும் நிகாத் ஜரீன் கட்டிஅணைக்க வந்த போது, மேரிகோம் ஒதுங்கிக் கொண்டது, சலசலப்பை ஏற்படுத்தியது.
வெற்றிக்கு பிறகு 36 வயதான மேரிகோம் கூறுகையில், நான் கொஞ்சம் கோபப்பட்டு விட்டேன். ஆனால் இப்போது எல்லாம் முடிந்து போய் விட்டது. நான் ஜரீனுக்கு சொல்வது என்னவென்றால் செயலில் காட்டி விட்டு பேச வேண்டும். இந்த சர்ச்சையை நான் தொடங்கவில்லை. தகுதி போட்டியில் பங்கேற்க முடியாது என்ற நான் ஒரு போதும் சொன்னது கிடையாது. இதில் எனது தவறு எதுவும் இல்லாத நிலையில், இந்த சர்ச்சையில் எனது பெயரை இழுத்திருக்ககூடாது. என்றார்.