image courtesy:twitter/@tamilnadupara 
பிற விளையாட்டு

தேசிய பாரா தடகளம்: ஒரே நாளில் தமிழகத்திற்கு 6 தங்கப்பதக்கங்கள்

தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் நேற்று ஒரே நாளில் தமிழகத்திற்கு ஆறு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன.

சென்னை,

மாற்றுத் திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 2-வது நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று அசத்தினர்.

பெண்களுக்கான 100 மீ. மற்றும் 400 மீ ஓட்டத்தில் தமிழகத்தின் கிரண் ஸ்ரீராம் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தொடர்ந்து ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் ரமேஷ் சண்முகம் தங்கப்பதக்கமும், மணிகண்டன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் தமிழகத்தின் பிரசாந்த் சுந்தரவேல், முத்துராஜா மற்றும் மனோஜ் சிங்கராஜா தங்கம் வென்றனர்.