image courtesy: Narendra Modi twitter  
பிற விளையாட்டு

பாரா ஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் தங்கம் வென்றார்

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்றுள்ளது.

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 6-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 26 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.