மும்பை,
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். இந்த போட்டியின் 8-வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனைத் தோற்கடித்ததால் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், உலகின் சிறந்த செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் என தெரிவித்துள்ளார்.
அதே போல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-
பிரக்ஞானந்தாவுக்கு இப்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இந்த 16 வயதில், அனுபவம் மிக்க, மேக்னஸ் கார்ல்சனை அதுவும் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடி தோற்கடிப்பது என்பது மகத்தானது. செஸ் விளையாட்டில் சாதிக்க வாழ்த்துகள். இந்தியாவை நீங்கள் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்
இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.