பிற விளையாட்டு

தைவான் தடகள ஓபன் 2025: தங்க பதக்கம் வென்றார் ஜோதி யர்ராஜி

100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் தேசிய சாதனையையும் ஜோதியே தக்க வைத்துள்ளார்.

புதுடெல்லி,

சீன தைபேவில், தைவான் தடகள ஓபன் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் நேற்று (சனிக்கிழமை) தொடங்கின. இதில், இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில், 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து உள்ளார். அவருக்கு தொடக்கம் சரியாக அமையாத நிலையில், 2-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டார். எனினும், விடாமல் தொடர்ந்து முன்னேறி, கடைசி 20 மீட்டர் இருக்கும்போது, முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்த போட்டியில், ஜப்பானின் அசுகா திராடா 13.04 விநாடிகள் ஓடி 2-வது இடம் பிடித்துள்ளார். அவருடைய சக நாட்டு வீராங்கனையான சிசாடோ கியோயமா (13.10 விநாடிகள்) 3-வது இடம் பிடித்துள்ளார்.

இந்த 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் தேசிய சாதனையையும் ஜோதியே தக்க வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு உலக பல்கலைக்கழக போட்டிகளில் கலந்து கொண்டு, 12.78 விநாடிகள் ஓடி அவர் இந்த சாதனையை ஏற்படுத்தினார்.

SCROLL FOR NEXT