பாங்காக்,
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் போட்டியில், 12ந்தேதி நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த அரையிறுதி போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரான கிதம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் போட்டியில் வெற்றி பெற்றார்.
உலக தர வரிசையில் 8வது இடம் வகிக்கும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றனர். இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனால், இந்தியாவின் 29 வயது வீரரான எச்.எஸ். பிரணாய் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய நிலையில், அவர் உலக தரவரிசையில் 13வது இடம் வகிக்கும் ராஸ்மஸ் கெம்கேவை எதிர்த்து விளையாடினார்.
அவருக்கு போட்டியின் ஒரு கட்டத்தில் காலில் காயம் ஏற்பட்டது. எனினும், வலியுடன் விளையாடிய பிரணாய், 13-21, 21-9, 21-12 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டது. மற்றொரு போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியா 3-2 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டி பாங்காக்கில் இன்று காலை 11.30 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் வீரர் லக்சயா சென் முதல் செட்டை கைப்பற்ற தவறினார்.
8-21 என்ற புள்ளி கணக்கில் அவரை எதிர்த்து விளையாடிய இந்தோனேசியாவின் அந்தோணி கின்திங் முதல் செட்டை தன்வசப்படுத்தினார்.
எனினும், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி 21-17 என்ற புள்ளி கணக்கில் அந்த செட்டை லக்சயா கைப்பற்றினார். 3வது செட்டிலும் திறமையாக விளையாடிய லக்சயா 21-16 என்ற புள்ளி கணக்கில் செட்டை கைப்பற்றி போட்டியிலும் வெற்றி பெற்றார். இதனால், இறுதி போட்டியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.