லண்டன்,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், ஏற்கெனவே ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்த சூழலில் அடுத்த மாத இறுதியில் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது.
தடை காரணமாக உலகின் 2-ம் நிலையில் உள்ள ரஷிய வீரர் மெத்வதேவ் பங்கேற்க இயலாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடைக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த தடை குறித்து நடால் கூறுகையில், "ரஷியாவை சேர்ந்த எனது டென்னிஸ் நண்பர்கள், சக வீரர்கள் விம்பிள்டன் தொடரில் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர். நடைபெற்று வரும் ரஷிய போருக்கு அவர்கள் ஒன்றும் காரணம் கிடையாது. அவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
ரஷிய வீரர்களின் தடை விம்பிள்டன் எடுத்த முடிவு. அரசாங்கம் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. வரும் வாரங்களில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். இதுகுறித்து வீரர்கள் எதாவது முடிவு எடுக்க வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.
நோவக் ஜோகோவிச் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், "கடந்த வருடம் கொரோனா தடுப்பூசி போடாததால் ஆஸ்திரேலியாவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். அதுவும் இதும் ஒன்றல்ல.
இருப்பினும் நான் எத்தகைய சிக்கல்களை சந்தித்தேனோ அதேபோன்ற சிக்கல்களை தான் எனது நண்பர்கள் சந்திக்கிறார்கள். நான் இப்போதும் என் நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன். நான் விம்பிள்டனின் இந்த முடிவுக்கு ஆதரவு தர மாட்டேன். இது நியாயம் அல்ல. இது சரியல்ல." என தெரிவித்துள்ளார்.