டென்னிஸ்

விம்பிள்டன் கோப்பையை வென்ற 21 வயது செக்குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவா

இன்று நடைபெறும் ஆண்கள் இறுதி ஆட்டத்தில் ஜானிக் சினெருடன், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதுகிறார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.

லிண்டா நோஸ்கோவா ‘சாம்பியன்'

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த சாம்பியனுக்கான இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவா (21), சக நாட்டவரும் 12-ம் நிலை வீராங்கனையுமான லிண்டா நோஸ் கோவாவுடன் (21) மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லிண்டா நோஸ்கோவா 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சி முகர்ந்தார். சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா நோஸ்கோவாவுக்கு ரூ.46 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற கரோலினா முச்சோவாவுக்கு ரூ.23 கோடி கிடைத்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி), பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் (ஜெர்மனி) பலப்பரீட்சை நடத்துகிறார்.

இருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். இதில் 10 ஆட்டங்களில் ஜானிக் சினெரும், 4 ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் வென்றுள்ளனர். கடைசி 9 ஆட்டங்களில் சினெர் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.