சென்னை,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இன்று ரைபகினா-சபலென்கா மல்லுகட்டுகிறார்கள்.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), கோகோ காப்புடன் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினார்.
முதல் செட்டில் தோல்வியடைந்த ரைபகினா, அதன் பிறகு கம்பேக் கொடுத்து 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை சாய்த்து, அமெரிக்க ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.
மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா (பெலாரஸ்), ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) சந்தித்தார். இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற நேர்செட்டில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி, தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் எலினா ரைபகினா-சபலென்கா மல்லுகட்டுகிறார்கள். இருவரும் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 3-வது முறையாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் ரைபகினா, சபலென்காவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அதற்குப் பழிதீர்க்க சபலென்கா வரிந்து கட்டுவார் என்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.