மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே கார் மோதி 4 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பயங்கர மோதல்
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் கார் ஒன்று வேகமாக வந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் ரெயில் நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பயந்து போன டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்த 4 வாலிபர்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை
படுகாயம் அடைந்த வாலிபர்கள் 4 பேரும் 17 முதல் 19 வயதுடையவர்கள். இதில் சிவ்ரியை சேர்ந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தப்பி ஓடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் திலீப் சந்வானி (வயது 78) என தெரியவந்தது. அவர் தென்மும்பையில் இருந்து மாகிமில் உள்ள வீட்டுக்கு காரில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து ஆசாத் மைதான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.