ஆன்மிகம்

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி

சப்பர பவனியின்போது ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி, மாலைகள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான திசையன்விளை உலக ரட்சகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அவ்வகையில் 141-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

9-ம் திருநாளான நேற்று முன்தினம் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும், இரவில் ஆலயத்தை சுற்றி சப்பர பவனியும் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

மாலையில் முக்கிய வீதிகள் வழியாக சப்பர பவனி நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி, மாலைகள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இந்துக்கள் தங்கள் வீட்டு முன்பு கோலமிட்டு வரவேற்பு அளித்தனர். இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இருந்தது.

இன்று காலை நன்றி திருப்பலிக்கு பிறகு கொடியிறக்கம் நடைபெற்றது. மாலையில் அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT