தேர்தல் 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 பேர் தபால் வாக்குகள் பதிவு: கலெக்டர் தகவல்

"தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா" என்ற முழக்கத்துடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில் மொத்தம் 8,437 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி 12.4.2026 முதல் 14.4.2026 வரை நடைபெற்றது. இதற்காக 149 மண்டல அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் நியமிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. படிவம் 12D மூலம் விருப்பம் தெரிவித்த வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, நுண்பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் சேகரிக்கப்பட்டு, முத்திரையிடப்பட்ட பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தொகுதி வாரியான தபால் வாக்குகள் விவரம் (14.4.2026 அன்று மட்டும்):

கடைசி நாளான ஏப்ரல் 14-ம் தேதி அன்று மட்டும் மொத்தம் 347 வாக்குகள் பதிவாகின. அதன் விவரம் பின்வருமாறு:

கன்னியாகுமரி: 103 மூத்த குடிமக்கள், 42 மாற்றுத்திறனாளிகள்.

நாகர்கோவில்: 14 மூத்த குடிமக்கள், 12 மாற்றுத்திறனாளிகள்.

குளச்சல்: 13 மூத்த குடிமக்கள், 7 மாற்றுத்திறனாளிகள்.

பத்மநாபபுரம்: 97 மூத்த குடிமக்கள், 52 மாற்றுத்திறனாளிகள்.

விளவங்கோடு: 2 மூத்த குடிமக்கள், 2 மாற்றுத்திறனாளிகள்.

கிள்ளியூர்: 1 மூத்த குடிமக்கள், 2 மாற்றுத்திறனாளிகள்.

ஒட்டுமொத்த நிலவரம்: கடந்த 3 நாட்களில் (ஏப்ரல் 12, 13, 14) மாவட்டம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட 5,211 மூத்த குடிமக்களும், 3,226 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 8,437 பேர் தபால் வாக்களித்துள்ளனர். ஜனநாய கடமையை ஆற்றிய வாக்காளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள மாவட்ட கலெக்டர் அழகுமீனா, "தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா" என்ற முழக்கத்துடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.