நெல்லை,
விஜயின் வருகை தென்தமிழக மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் என்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரியஜான் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய் தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான விதையை விதைக்க புறப்பட்டுள்ள த.வெ.க. தலைவர் விஜய்யை திருநெல்வேலியின் இதய பகுதியான பாளையங்கோட்டைக்கு வரவேற்கிறோம்.
பாளையங்கோட்டை தமிழர்களின் வீரத்திற்கும், கல்விக்கும் சான்றாக விளங்கும் வரலாற்றுப் பெட்டகமாகும். கி.பி. 9-ம் நூற்றாண்டில் 'ஸ்ரீ வல்லப மங்கலம்' என்ற பெயரில் உருவான இந்தக்கோட்டை நகரம் பாண்டியர், சோழர் மற்றும் வேணாட்டு மன்னர்களின் அதிகாரமையமாக திகழ்ந்தது. 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் அடக்குமுறைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பாளையக்காரர்கள், வீரபாண்டிய கட்டப்பொம்மன் உள்ளிட்ட மாவீரர்களின் விடுதலை வேட்கைக்கு இந்தபகுதி சாட்சியாக இருந்துள்ளது. தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களின் சங்கமமாக திகழ்வதால் இது "தென்னிந்தியாவின் ஆக்ஸ் போர்டு" என்று அழைக்கப்படுகிறது.
கல்வியும் வீரமும் சரிவிகிதத்தில் கலந்த இந்த மண்ணிற்கு புதிய அரசியல் பாய்ச்சலை முன்னெடுத்து நாளை தலைவர் விஜய்யின் வருகை தென்தமிழக மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும். தூய அரசியல் மாற்றத்தை உருவாக்கப் புறப்பட்டுள்ள அவரை பாளையங்கோட்டை மக்கள் சார்பாக வரவேற்கிறோம். வெற்றி நிச்சயம், தமிழ்நாடு மீளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள இடம் குறித்து நேற்று செங்கோட்டையன் மற்றும் மரியஜான் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தார்கள். இதில் பாளையங்கோட்டை வேட்பாளர் மரிய ஜானுக்கு சொந்தமான ராஜகோபாலபுரத்தில் உள்ள இடத்தில் விஜய் பிரசாரம் செய்யவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.