கோவை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, திமுகவின் குடும்ப அரசியலையும், ஊழல் முகத்தையும் தேடினாலும் கிடைக்காதபடி நார் நாராக உரித்துப் புதைத்துவிட்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், முதல்-அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும், முதன்மைத் தலைவர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய நமது பாரதப் பிரதமர், “குடும்பத்திற்காக, குடும்பத்தினரால் நடத்தப்படும் குடும்பத்தினால் ஆன கட்சி” என்பதை நெத்திப் பொட்டில் அடித்தாற்போல மீண்டுமொருமுறை மக்கள் மனதில் பதியவைத்துவிட்டார். இனி திமுக என்னதான் முட்டி மோதினாலும் அவர்களின் அரியணைக் கனவு துளியும் நிறைவேறாது.
எனவே, தாமரைச் சொந்தங்களே நேற்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாகத் திமுகவின் ஆட்சிக்கனவு தகர்க்கப்பட்டுள்ளது. நமக்கான வெற்றிப் பாதை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அயராது உழைப்போம், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டுவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.