தென்காசி,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஏற்கனவே வாக்கு சேகரித்து சென்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள சூழலில், மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து தங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தென்காசி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். சிந்தாமணியில் இருந்து காமராஜர் சிலை வரை ரோடு ஷோ செல்கிறார். இதன்பின்பு மதியம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார். இதனையடுத்து இன்று மாலையில் ராதாபுரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.