சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் 'மக்களின் தேர்தல் அறிக்கை 2026' என்ற பெயரில் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 உத்தரவாதங்கள் வருமாறு:-
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; 6 விலையில்லா சிலிண்டர்கள்; மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் + பட்டுச்சேலை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; மாணவர்களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி; மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை; ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப்; 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்; தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்; அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை.
உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள்; ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன்; நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள்; ஏஐ (Artificial Intelligence) மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்.
நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி; பயிர்க் கடன்கள் தள்ளுபடி; MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500; 5 லட்சம் சோலார் பம்புகள்; தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100 சதவீத பயிர்க் காப்பீடு.
குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு; நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை; ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை; போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு.
தடைக்கால நிவாரணம் ரூ.27,000; மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை; ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு; மீனவர்களுக்கு நிரந்தர வீடு.
முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்; 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு; நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா.
2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்; ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ நகரம்; MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக 'மாஸ்டர் பிளான்'; தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை (OPS); ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின்போது ரூ.15 லட்சம்.
லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில்; காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள்; நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதம் திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.