திருச்சி,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த 2-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்த விஜய், அன்றைய தினமே அங்குள்ள மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விஜய் தேர்தல் பிரசாரங்களையும், ரோடு ஷோ நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று விஜய் திருச்சி புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்த விஜய், விமான நிலையத்தில் இருந்து தனது பரப்புரை வாகனத்தின் மீது நின்றவாறு சாலை மார்க்கமாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். இந்த ரோடு ஷோவில் ஆயிரக்கணக்கான த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.