தேர்தல் 2026

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரசாரம்: போலீசார் அனுமதி

விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்ட பல்வேறு இடங்களிலும் திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

திருச்சி,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 2-ந் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்த விஜய், அன்றைய தினமே மரக்கடை காந்திமார்க்கெட் அருகே பிரசாரம் செய்தார்.

அதன்பிறகு விஜய் மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு. அங்கு போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கினார். திருச்சி கிழக்கில் போட்டி யிடும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி, போட்டு கொண்டு தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரித்து வரும் நிலையில், திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய் மீண்டும் பிரசாரம் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடம் ஏற்பட்டது.

மேலும், விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்ட பல்வேறு இடங்களிலும் திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் அவர் வருவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டதாக பரவலாக பேசப்பட்டது. இந்த சூழலில் த.வெ.க.. தலைவர் விஜய் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்சியில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்லும் விஜய், விமானநிலையம் வயர்லெஸ் ரோடு, டி.வி.எஸ்.டோல்கேட், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று, சிந்தாமணி அண்ணாசிலை, சத்திரம் பஸ்நிலையம், சிங்காரத்தோப்பு, மரக்கடை, பாலக்கரை வழியாக சாலை வலம் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரசாரத்திற்கு 27 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதன்படி நாளை பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரை விஜய் பிரசாரத்திற்கு திருச்சி போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.