திருச்சி,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜை ஆதரித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜனதா என்கிற கட்சியை அதிமுக தோளில் சுமந்து வருகிறது. இந்த கட்சிகளுக்கு மறைமுகமாக துணை போகிறவர்தான் த.வெ.க. தலைவர் விஜய். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்று வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, விஜய்யோ என்றைக்காவது இதுபற்றி பேசியிருப்பார்களா. தலித் கிறிஸ்தவர்களை பாதுகாக்க வேண்டுமென்றால் மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும்.
ஜோசப் விஜய் எந்த அடையாளமும் இல்லாமல் சினிமாவை வைத்து வாக்குகளை பிரிக்க முயற்சிக்கிறார். எனவே நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டாலும் சரி, விசில் சின்னத்துக்கு ஓட்டு போட்டாலும் சரி அது மோடிக்கு தான் செல்லும். எனவே உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இனிகோ இருதயராஜை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.