Trending

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது: அமித்ஷா வழங்கினார்

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருதை மத்திய மந்திரி அமித்ஷா வழங்கினார்

புதுச்சேரி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு 8.30 மணியளவில் புதுச்சேரி வந்தார். கவர்னர் மாளிகைக்கு வந்த அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் மாளிகையில் அமித்ஷா தங்கினார்.

இந்த நிலையில், கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு புதுவை காவல்துறைக்கு 'ஜனாதிபதியின் வண்ணக்கொடி' விருதை வழங்கினார். ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது என்பது இந்தியாவின் முப்படைகள், துணை ராணுவப் படைகள் அல்லது மாநிலக் காவல்துறை பிரிவுகளுக்கு அவற்றின் சிறப்பான நீண்டகாலச் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டி ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயரிய கவுரவமாகும்.

விழாவில் அமித்ஷா பேசியதாவது:-

கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களில் தகவல்களை கேட்டபோது, புதுச்சேரி காவல்துறை மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடத்தை பெற்றது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் சாகச நிறை மனதோடு பணி புரிந்திருக்கிறீர்கள்.

அச்சமின்றி துணிச்சலான மனதுடன் காவலர்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. கடந்த 12 ஆண்டுகளாகவே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை யூனியன் பிரதேசம் மேம்பட வேண்டும் என்பதுதான். குறிப்பாக புதுச்சேரிக்கு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளும் திட்டங்களும் வழங்கி வருகிறது என்று கூறினார்.

தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர் நேராக ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பின் அவர் பகல் 12 மணி முதல் 1 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியின் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.