சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாகி வருகின்றன. அந்த வகையில் த.வெ.க. சார்பில் டிஜிட்டல் பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட அளவில் கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தல் சுற்றுப்பயணம், பூத் கமிட்டி நியமனம் போன்றவை குறித்து விஜய் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க இருக்கிறார். சேலத்தில் 13-ந்தேதி நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு, பிரசார கூட்டம், அதனைத் தொடர்ந்து வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் நடக்க இருக்கும் கூட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பிரசார இடங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வாங்குவது, மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை அதிகப்படுத்துவது குறித்தும் விஜய் விவாதிக்க இருக்கிறார்.