கட்சி விரோத நடவடிக்கை: தேசியவாத காங்கிரசில் இருந்து 2 எம்.பி.க்கள் நீக்கம் - சரத்பவார் அறிவிப்பு

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி தேசியவாத காங்கிரசில் இருந்து 2 எம்.பி.க்களை நீக்கி சரத்பவார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
Published on

மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் இணைந்தனர். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல் எம்.பி. முன்னின்று ஆதரவு தெரிவித்து வருகிறார். இதேபோல மற்றொரு மூத்த தலைவரான சுனில் தட்காரே எம்.பி.யும் அஜித்பவாருக்கு ஆதரவாக உள்ளார். இவரது மகள் அதீதி தட்காரே அஜித்பவாருடன் மந்திரி பதவி ஏற்று இருந்தார். இந்த நிலையில் பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்காரே இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி சரத்பவார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக சரத்பவார் தனது டுவிட்டர் பதிவில், "கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்காரேயை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குகிறேன். கட்சியின் தேசிய தலைவர் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுடன் கட்சியின் மற்றொரு செயல் தலைவராக பிரபுல் படேலை கடந்த மாதம் தான் சரத்பவார் நியமித்து இருந்தார். பிரபுல் படேல் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். மன்மோகன்சிங் மந்திரி சபையில் 10 ஆண்டு காலம் மத்திய மந்திரி பதவி வகித்தவர் ஆவார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு தலைவரான சுனில் தட்காரே, ராய்காட் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவர் மராட்டிய மந்திரியாக பதவி வகித்துள்ளார். இதற்கிடையே இவர்கள் இருவரையும் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய மனு அளிக்க வேண்டும் என்று சரத்பவாருக்கு அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி. கடிதம் அனுப்பி உள்ளார். தேசியவாத காங்கிரசுக்கு மக்களவையில் 5 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com