கொரோனாவுக்கு பலியான முதியவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு பெருமுகையில் பரபரப்பு

பெருமுகையில் கொரோனாவுக்கு பலியான முதியவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கொரோனாவுக்கு பலியான முதியவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு பெருமுகையில் பரபரப்பு
Published on

வேலூர்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 87). இவர் வேலூரை அடுத்த இடையஞ்சாத்து ராஜாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வர்கீசுக்கு 8-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று காலை வர்கீசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 10 மணியளவில் உயிரிழந்தார். அவருடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக கேரளாவுக்கு உடலை கொண்டு செல்ல முடியாத காரணத்தால் பெருமுகையில் உள்ள தேவாலயத்தின் இடுகாட்டில் புதைக்க முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து நேற்று மாலை இடுகாட்டில் உடலை புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதனை அறிந்த அந்த பகுதிமக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அரசின் விதிமுறைகளின்படி உடல் அடக்கம் செய்யப்படும் என்று வருவாய்த்துறையினர், பொதுமக்களிடம் தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து இடுகாட்டில் வர்க்கீசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில், அவருடைய குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com