

பரமக்குடி,
பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட மேலப்பார்த்திபனூர், கொத்தங்குளம், மோசுகுடி, இடையாத்தூர், பிடாரிச்சேரி, புத்தூர், கள்ளிக்குடி, உள்பட 16 கிராமங் களுக்கான நீர் பாசன விவசாயிகள் சங்க தேர்தல் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது. இதில் 76 பதவிகளுக்கு 177 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் தலைவர் உள்பட 4 உறுப்பினர்கள் வீதம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. தேர்தல் நடைபெறாமல் எப்படி இவர்கள் வெற்றி பெற்றார்கள் என கேட்டு சிலர் நேற்று ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு ஆர்.டி.ஓ. முருகன் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்ற அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டதாக விவரத்தை எடுத்துக் கூறினார். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.