அடுக்குமாடியில் உருவாக்கப்பட்ட செயற்கை நீர் வீழ்ச்சி

இன்றைய அவசரமான நகர வாழ்க்கை முறைகளில் அவ்வப்போது பார்க்கக்கூடிய இயற்கை காட்சிகளில் அனைவரும் மனதை பறிகொடுப்பது வழக்கமானது.
அடுக்குமாடியில் உருவாக்கப்பட்ட செயற்கை நீர் வீழ்ச்சி
Published on

அந்த அடிப்படையில் பரபரப்பான நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள உயரமான கட்டிடத்தில் செயற்கையான நீர் வீழ்ச்சியை சீனாவை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

செயற்கை நீர் வீழ்ச்சி


சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள வளர்ந்து வரும் குய்சோ மாகாணத்தின் தலைநகரான குயாங் நகரத்தின் மத்தியில் சமீபத்தில் கட்டப்பட்ட லைபியன் இன்டர்நேஷனல் பிளாசா என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நீர் வீழ்ச்சி, அதன் மேல் பகுதியில் இருந்து கொட்டுவது உலக அளவில் உள்ள இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது.

394 அடி உயரம்

கிட்டத்தட்ட 120 மீட்டர் உயரம் (394 அடி) கொண்ட கலப்பு உபயோக (Mixed Use Apartment) பயன்பாட்டுக்கான அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் அலுவலகங்கள், ஷாப்பிங் மால், சொகுசு ஹோட்டல் ஆகியவை உள்ளன. அதன் சிறப்பம்சமாக கவர்ச்சி தரும் வகையில் கிட்டத்தட்ட 108 மீட்டர் அதாவது 354 அடிகள் உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும் செயற்கை நீர் வீழ்ச்சி செயல்படுத்தப்படுகிறது. அதன் வடிவமைப்பு உள்ளிட்ட கட்டுமான பணிகளை லூடி இன்டஸ்ட்ரி குரூப் என்ற நிறுவனம் செய்திருக்கிறது.

முக்கியமான நாட்கள்

செயற்கை நீர்வீழ்ச்சி முற்றிலும் மின்சார சக்தியை பயன்படுத்தியே இயங்குகிறது. அதாவது மிகவும் சக்தி வாய்ந்த மின்சார மோட்டார்கள் மூலம் நீர் மேலே ஏற்றப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீர் வீழ்ச்சி இயங்குவதற்கு, இரண்டு மணி நேரம் ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதோடு, அதற்கு இந்திய மதிப்பில் ரூ.8 ஆயிரம் வரை செலவாகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மின் மோட்டார் மூலம் தண்ணீரை கீழே இருந்து மேலே ஏற்றி, அதை அருவியாக கொட்ட வைக்க இந்த செலவு ஆகிறது. அதன் காரணமாக முக்கியமான நாட்களில் மட்டும் நீர் வீழ்ச்சியை செயல்பட வைக்க இயலும் என கட்டிட உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பெரிய செயற்கை நீர்வீழ்ச்சி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமான பணிகள் செய்து முடிக்கப்பட்ட அந்த கட்டிடத்தில், இதுவரை 7 அல்லது 8 முறைகள் மட்டும் அந்த நீர் வீழ்ச்சி செயல்பட்டுள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சி என்றும், கீழே கொட்டும் தண்ணீர் மற்றும் மழை நீர் ஆகியவை நிலப்பகுதிக்கு கீழே ஒரு டேங்கில் சேமிக்கப்படும் காரணத்தால், அப்பகுதியின் நிலத்தடி நீர்வளம் அதிகரிக்கும் என்றும் கட்டிட உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com