ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா தொடங்கியது

ஆனி உத்திர திருவிழாவில் இன்று இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா தொடங்கியது
Published on

ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று காலையில் கணபதி ஹோமம் , மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளல், மாலையில் நால்வர் சுவாமிகளின் புறப்பாடு, தேவார திருமுறை பாராயணம், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தன.

இன்று அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது. பின்னர் கொடியேற்றம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. பூஜை வைபவங்களை சிவாச்சாரியார்கள் சுரேஷ் பட்டர், விக்னேஷ் சிவம், விஜய் பட்டர் மற்றும் பாலாஜி, ராமசாமி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

ஓதுவார்கள் சங்கர நயினார், ரத்ன சபாபதி திருமுறை பாராயணம் நிகழ்த்தினர். கோவில் மணியம் சுப்பையா, அரிகிருஷ்ணன், தங்கமணி, இளையபெருமாள், சங்கரலிங்கம், கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவசங்கரி, அமிர்தராஜ், பேராசிரியர் அசோக்குமார், அய்யப்பன், கந்தசாமி பாண்டியன், தொழிலதிபர் தவமணி, திருக்கயிலாய வாத்திய இசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் திருநாவுக்கரசர் சுவாமிகளின் உழவாரப்பணி உலா நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினசரி காலையும் மாலையும் சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கின்றன. நிறைவாக ஜூலை 1ம் தேதி (10-வது நாள் திருவிழா) மாலையில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com