மகரம்: புத்தாண்டு ராசிபலன் 2026: விட்டதை பிடிக்கும் காலகட்டம் இது.. வாய்ப்புகளை தவற விடாதீர்கள்..!

சரியான நேரத்திற்கு உண்பது, உறங்குவது, மௌனம் ஆகியவற்றின் மூலம் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்.
மகரம்: புத்தாண்டு ராசிபலன் 2026: விட்டதை பிடிக்கும் காலகட்டம் இது.. வாய்ப்புகளை தவற விடாதீர்கள்..!
Published on

மகர ராசியினருக்கு இந்த ஆங்கில புத்தாண்டு தடைகளை தகர்த்து வெற்றிகளை தரும் முன்னேற்றமான காலகட்டமாக அமைகிறது. திருதிய, வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் ராசி அதிபதி சஞ்சாரம் செய்வதும், வருடத்தின் பிற்பகுதியில் சப்தம ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி அடைவதும் நன்மை பல தரும் அமைப்பாகும். கிடைத்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும் காலகட்டம் இது. மவுனம் கலைத்து, உங்கள் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் கிடைக்கும். வருடத்தின் மத்தியில் நடக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர இருக்கிறது. விட்டதை பிடிக்கும் காலகட்டம் இது.

குடும்பம், பொருளாதாரம்

திருமணம் ஆகாதவர்கள், திருமண வாழ்வில் சிக்கல்களை சந்திப்பவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு சந்தானம் பாக்கியம் உண்டு. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமைகள்

வந்து சேரும். விட்டுப் போன உறவுகள் தொட்டுத் தொடர, வீட்டுக் கதவை வந்து தட்டும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகர ராசியினருக்கு இந்த ஆண்டு பொருளாதார சிக்கல்கள் விலகும். வாழ்க்கைத் துணை மற்றும் அவரது குடும்பத்தவர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் உண்டு. வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதன் பின்னர் அவற்றை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். பங்கு வர்த்தகம் லாபகரமாக இருக்கும்.

தொழில், உத்தியோகம்

அரசு ஒப்பந்த பணிகள், தொழில்நுட்பம், கட்டுமானம், ஓட்டல் மற்றும் மரம் ஆகிய தொழில்துறைகளில் நல்ல லாபம் உண்டு. சிறு வியாபாரிகளுக்கு எதிர்பாராத வளர்ச்சிகள் கிடைக்கும். எழுத்தாளர்கள் நல்ல புகழ் பெறுவார்கள். தொழில் ரீதியாக வெற்றி அடைய உங்கள் முன்னோடிகளின் வழிகாட்டுதல்களை பெற்று செயல்படுவது நல்லது. புதிய பொறுப்புகளை தைரியமாக ஏற்றுக் கொள்ளலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பணியிடங்களில் சக ஊழியர்கள் இடம் சுமுகமாக பழகுவது அவசியம். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் வெளி மாநில, வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். அவற்றை தைரியமாக ஏற்றுக் கொள்ளலாம்.

கலை, கல்வி

தொலைக்காட்சி, சினிமா, இசைத்துறை மற்றும் இதர கலை துறையில் உள்ளவர்களுக்கு புதிய இடங்களில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தும் சூழ்நிலை அமையும். புதிய சிந்தனைகளை தைரியமாக வெளிப்படுத்தி புகழ் பெறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும்போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஊடகத்துறையினர் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும்.

கல்வியை பொறுத்தவரை மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாட்டு பல்கலை கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். பலரும் அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல பணிகளில் அமர்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் கல்வியை பூர்த்தி செய்வார்கள்.

நன்மைகள் நாடி வர..

உடல் நிலையை பொறுத்த வரை ஜீரண சுரப்பு நீரில் பாதிப்புகள் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் கவனமாக பயணம் செய்ய வேண்டும். வயிறு, இடுப்பு, பிறப்பு உறுப்பு சம்பந்தமான சிக்கல்கள் ஏற்பட்டு சிகிச்சை மூலம் அகலும். சரியான நேரத்திற்கு உண்பது, உறங்குவது, மௌனம் ஆகியவற்றின் மூலம் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

மகர ராசியினர் கோவில்களில் நடைபெறும் உழவாரப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அதிர்ஷ்ட வாழ்வை பெறலாம். ஆசிரியர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களுக்கு பரிசுகள் அளித்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது பல நன்மைகளை தரும். பிறந்த கிழமை அல்லது பிறந்த ஆங்கில தேதியில் சிவபெருமானுக்கு திருநீறு அபிஷேகம், அம்பிகைக்கு சந்தன அபிஷேகம் செய்வதன் மூலம் புண்ணிய பலம் அதிகரிக்கும். புண்ணிய நதிகளில் நீராடுவதும் விசேஷம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com