சனிப்பெயர்ச்சி: மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள், பரிகாரங்கள் - முழு விவரம்

சனிபகவான் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு இடம்பெயர்ந்தார்.
சனிப்பெயர்ச்சி: மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள், பரிகாரங்கள் - முழு விவரம்
Published on

சனிப்பெயர்ச்சி

ஜோதிடத்தில் சனிபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாறும் நிகழ்வே சனிப்பெயர்ச்சி ஆகும். சனீஸ்வரன் ஒவ்வொரு ராசியிலும் 2.5 ஆண்டுகள் தங்குகிறார். அந்த வகையில் சனீஸ்வரன் கடந்த 2.5 ஆண்டுகளாக கும்பர ராசியில் நிலைகொண்டிருந்தார்.

இதனிடையே, கடந்த 2.5 ஆண்டுகளாக கும்ப ராசியில் நிலைகொண்டிருந்த சனிபகவான் இன்று மீனராசிக்கு இடம்பெயர்ந்தார். இன்று காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

இந்நிலையில், கும்ப ராசியில் இருந்த சனீஸ்வரன் மீன ராசிக்கு இடம்பெயர்ந்த நிலையில் ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள், பரிகாரங்களை இங்கு காண்போம்.

மேஷம்

பலன்கள்

மேஷ ராசி நேயர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் ஏழரைச் சனியின் முதல் கட்டமான விரயச் சனி தொடங்குகிறது. உங்கள் ராசிக்கு 10 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 12-ம் இடமான அயன, சயன மோட்ச ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இது ஒரு மாறுதலான பலன்களைத் தரும் காலமாகும். விரயச் சனி என்பது செலவுகளைக் குறிக்கும் என்றாலும், சனி பகவான் உங்கள் ராசிக்குத் தொழில் மற்றும் லாபத்திற்கு அதிபதியாக இருப்பதால், இந்தச் செலவுகள் அனைத்தும் சுப விரயங்களாக, ஆதாயம் அளிப்பவையாக அமையும்.

நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு இப்போது விசா மற்றும் பயண வாய்ப்புகள் எளிதாகக் கைகூடும். பொதுவாக, உங்கள் ராசியில் சனி பகவான் நீசம் பெறுவார் என்பதால், விரயத்தில் அவர் சஞ்சரிப்பது ஒரு வகையில் கெடுபலன்களைக் குறைக்க உதவும். இளம் வயது மேஷ ராசியினருக்கு இது அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும் காலமாகவும், 40 முதல் 50 வயதுடையவர்களுக்கு பொங்கு சனியாக வந்து உழைப்பிற்கேற்ற முன்னேற்றத்தைத் தரும் காலமாகவும் அமையும்.

சனியின் பார்வை 2, 6, 9 ஆகிய இடங்களில் விழுவதால், குடும்பம் மற்றும் பொருளாதார ரீதியாக சில சங்கடங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடையே, குறிப்பாகத் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பண வரவு சீராக இருந்தாலும், சேமிப்பது கடினமாக இருக்கும்.

எதிர்பாராத மருத்துவச் செலவுகள் அல்லது சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் வரிசையாக ஏற்படும். நிதி மேலாண்மையில் அதிகக் கவனம் தேவைப்படும் காலமிது. புதிய முதலீடுகளைச் செய்யும் போது ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது அவசியம். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்க வேண்டும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் தற்போதைக்கு அமைதி காப்பதே நல்லது.

கூடுதல் பணிச்சுமை இருக்கும் என்பதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நேர மேலாண்மை மிகவும் அவசியம். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்து அதிபதி 12-ல் மறைவதால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் தற்காலிகமாகப் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல லாபத்தையும், புகழையும் தரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் கூட்டாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது, தேவையற்ற சிக்கல்களில் இருந்து உங்களைக் காக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். முதியோர்களை, அரவாணிகளை வணங்கி ஆசி பெறுவதும், ஆதரவற்ற அநாதைகளுக்கு, ஏழைகளுக்கு காலணிகள் அல்லது கருப்பு ஆடை, புளியோதரை தானம் செய்வதும் சனியின் தாக்கத்தைக் குறைக்கும்.

வாழ்வியல் ரீதியாக, நேர்மையான வழியில் நடப்பதும், மற்றவர் குற்றங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பதும் சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும். ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதும், நாய்களுக்கு உணவிடுவதும் உங்கள் கர்ம வினைகளைக் குறைக்கும்.

ரிஷபம்

பலன்கள்

ரிஷப ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி மாபெரும் ராஜயோக பலன்களை வழங்கப்போகிறது. உங்கள் ராசிக்கு 9 மற்றும் 10-ம் இடங்களுக்கு அதிபதியான தர்ம-கர்மாதிபதி சனி பகவான், இப்போது 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். இது ஜோதிட ரீதியாக ‘லாபச் சனி’ என்று போற்றப்படுகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த போராட்டங்கள், தடைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்தும் பனிபோல் விலகி, தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும் பொற்காலம் இது.

சனியின் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் அமையும் போது, உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதுடன், நீண்ட காலக் கனவுகள் நனவாகும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் பலமடங்கு அதிகரிக்கும். இல்லறம் இனிக்கும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும், தம்பதியினரிடையே ஒற்றுமை பலப்படும். பலருக்கும் இப்போது திருமண யோகம் மற்றும் புத்திர பாக்கியம் கைகூடும். பொருளாதார ரீதியாக சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். புதிய சொத்துக்கள், வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் வலுவாக உள்ளது. மூத்த சகோதர சகோதரிகள், நண்பர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்குப் பலம் சேர்க்கும். பொருளாதார ரீதியான சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து, நிம்மதியான சூழல் நிலவும். சொந்த பந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தொழில் மற்றும் உத்தியோகத்தைப் பொறுத்தவரை, புதிய வேலை தேடுபவர்களுக்கு உயர்ந்த சம்பளத்துடன் கூடிய வேலை அமையும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்,

தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான நிதி உதவிகள் எளிதாகக் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் உழைப்பை அங்கீகரிப்பார்கள். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம் என்பதால், துணிச்சலாகப் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு வழங்குவதும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும். சனிக்கிழமைகளில் சிவபெருமான் சன்னதியில் எள் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.

அதிக தன்னம்பிக்கையால் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது உங்கள் வெற்றியை நிரந்தரமாக்கும். பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த அரிசி வழங்குவது மங்களகரமான பலன்களைத் தரும்.

மிதுனம்

பலன்கள்

மிதுன ராசி நேயர்களுக்குச் சனி பகவான் 9 மற்றும் 10-ம் இடங்களுக்கு அதிபதியாகிறார். அவர் இப்போது 10-ம் இடமான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது கர்மச் சனி என்று அழைக்கப்படும் ஒரு நிலையாகும். 10-ம் இடத்தில் சனி அமர்வது என்பது கடின உழைப்பை தரவேண்டிய ஒரு காலகட்டமாகும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகச்சிறந்த பலன்களைத் தரும்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு வரும்போது, சனியின் தாக்கத்தால் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும். 12 ஆண்டுகால ஒரு கடினமான சுழற்சி முடிந்து, இனி வரும் காலம் உங்களுக்கு ராஜயோகமாக அமையப்போகிறது. சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 12, 4, 7 ஆகிய இடங்களில் விழுவதால், குடும்ப விவகாரம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் திட்டமிட்ட நடைமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

குடும்ப உறவுகளில் சிறு குழப்பங்கள் அல்லது புரிதல் குறைபாடுகள் ஏற்படும். ஆனால் ஜூன் 2026-க்குப் பிறகு அவை அனைத்தும் நீங்கி அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. பொருளாதார ரீதியாக, செலவுகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

பண வரவு சீராக இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் திடீர் லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள், குறிப்பாகத் திருமணம் அல்லது கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலையான தன்மை நிலவும். பணியிடத்தில் அதிகப் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணம். சனி பகவான் உங்கள் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால், அடிமட்டத்திலிருந்து உழைப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். 2026-ம் ஆண்டின் இரண்டாம் பாதி பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு மிகவும் சாதகமான காலகட்டம் ஆகும்.

பரிகாரம்

மிதுனம் ராசியினர் சனிக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து, சிவ வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும். துளசி செடியின் அருகில் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும் சனியின் தாக்கத்தைக் குறைக்கும்.

பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, உங்கள் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது உங்களை உயர்த்தும். கோவிலை வலம் வருவதும், பிரதோஷ காலங்களில் நந்திக்கு பால் அபிஷேகம் செய்வதும் மன அமைதி தரும். தினசரி கருப்புப் பசுவிற்கு உணவளிப்பது சனியின் அருளைப் பெற்றுத் தரும்.

கடகம்

பலன்கள்

கடக ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஒரு மாபெரும் விடுதலையைத் தருகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த ‘அஷ்டமச் சனி’ கோளாறுகள் இப்போது முடிவுக்கு வருகிறது. சனியினால் நீங்கள் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், இழப்புகள் அனைத்தும் நீங்கி, இனி அதிர்ஷ்டக் காற்றைச் சுவாசிக்கப் போகிறீர்கள். உங்கள் ராசிக்கு 7 மற்றும் 8-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வருகிறார்.

இது ‘பாக்கியச் சனி’ என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமச் சனியால் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கும் காலம் இது. தைரியம், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் உங்கள் வாழ்வில் மீண்டும் துளிர்விடும். எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் அதில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை மனதில் உதயமாகும்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன திருமணத் தடைகள் நீங்கி சுப காரியங்கள் இனிதே நடக்கும். தந்தையுடனான உறவில் இருந்த விரிசல்கள் நீங்கி இணக்கம் ஏற்படும். பொருளாதார ரீதியாக, இதுவரை நிலவி வந்த நிதி நெருக்கடிகள் அனைத்தும் நல்லபடி தீரும்.

கடன்களை அடைப்பதற்கான வருமான வழிகள் பிறக்கும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் வரும். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகள் மற்றும் கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். குழந்தைகளால் பெருமிதம் கொள்ளும் சூழல் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பதவி உயர்வு மற்றும் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, புதிய கிளைகளைத் தொடங்கும் யோகம் உண்டு.

வெளிநாட்டு வேலை அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்பியவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்புகள் கைகூடும். நண்பர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆதரவு உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்கும். உங்களின் செயல்திறன் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். வேலையிழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்.

பரிகாரம்

கடக ராசியினர் சனிக்கிழமைகளில் அம்பிகைக்கு பசும்பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பாகும். திருச்செந்தூர், குச்சனூர் அல்லது திருநள்ளாறு ஆகிய தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது அஷ்டமச் சனியின் மிச்சமுள்ள தாக்கத்தையும் நீக்கும்.

கிடைத்த வெற்றிகளால் பெருமிதம் கொள்ளாமல், மற்றவர்களுக்கு உதவி செய்வதைத் தொடர்வது சனியின் அருளை நிலைக்கச் செய்யும். செவ்வரளி மலர்களால் வராஹி அல்லது முருகப்பெருமானை வழிபடுவது கூடுதல் பலம் சேர்க்கும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதும் மிகச்சிறந்த பரிகாரமாகும்.

சிம்மம்

பலன்கள்

சிம்ம ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஒரு சவாலான காலகட்டமாக அமைகிறது. உங்கள் ராசிக்கு 6 மற்றும் 7-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு வருகிறார். இந்த ‘அஷ்டமச் சனி’ காலம் என்பது ஜோதிட ரீதியாக ஒரு போராட்டமான காலம் ஆகும். அதே சமயம், சுப கிரகமான குருவின் வீட்டில் சனி இருப்பதால் ‘கர்ம பலன் நிவர்த்தி’ காலமாகவும் இது அமையும்.

ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனி உங்கள் ஆரோக்கியம், வண்டி வாகனப் பயணம் மற்றும் நீண்ட காலத் திட்டங்களில் சில தடைகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சட்ட விவகாரங்களில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. இருப்பினும், 11-ம் இடத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பை வழங்கும்.

குடும்பத்தில் அமைதி காக்க நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வருமானத்தை விடச் செலவுகள் அதிகம் ஏற்படும். அதனால் சிக்கனம் அவசியம்.

தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வரி விவகாரங்கள் மற்றும் சட்டப்பூர்வ ஒப்பந்தங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தேவையற்ற வெளியூர் பயணங்களைக் குறைத்துக் கொண்டு குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவது நல்லது. கடன்களைக் கட்டுப்படுத்த வரவுக்குள் செலவு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில், உத்தியோகம்

தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் திடீர் மாற்றங்கள் அல்லது மேலதிகாரிகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். வேலையை மாற்றும் முடிவை, விடும் முடிவை கண்டிப்பாக தள்ளி வைப்பது நல்லது. சுயதொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலும் லாபம் அடைவதை விட, இருப்பதை இழக்காமல் இருப்பதே இந்த இரண்டரை ஆண்டுகாலத்தின் வெற்றியாகும். பணி புரியும் இடத்தில் உங்களது பொறுமையைச் சோதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

பரிகாரம்

சிம்ம ராசியினர் தினசரி அதிகாலையில் எழுவதும், சூரிய தரிசனம், கருட தரிசனம் செய்வதும் மிகவும் அவசியம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி, கருடாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அஷ்டமச் சனியின் பாதிப்பைக் குறைக்கும்.

வண்டி வாகனங்களை இயக்கும் போது அதீத வேகத்தை தவிர்ப்பதும், முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பதும் முக்கியம். ஏழைகளுக்குப் போர்வை அல்லது கருப்பு ஆடைகளைத் தானம் செய்வது நல்ல சனிப்ரீதியாக அமையும். ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று நித்திய பிரதோஷ காலத்தில் (தினசரி மாலை) வழிபடுவது சிறந்தது.

கன்னி

பலன்கள்

கன்னி ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி மிதமான பலன்களை வழங்கும். உங்கள் ராசிக்கு 5 மற்றும் 6-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஜோதிட ரீதியாக இது ‘கண்டகச் சனி’ என்று அழைக்கப்பட்டாலும், மீன ராசி சுபரான குருவின் வீடு என்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது.

சனியின் பார்வை 9, 1, 4 ஆகிய இடங்களில் விழுவதால், உங்கள் ஆரோக்கியம் மற்றும் தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டவும். நீண்ட நாட்களாக இருந்த திருமணத் தடைகள் இப்போது விலகும். கணவன்-மனைவி இடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். பொருளாதார ரீதியாக, வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. இருப்பினும், வீண் ஆடம்பரச் செலவுகளைத் திட்டமிட்டு தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நல்லது.

குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு இக்கட்டான நேரங்களில் வழிகாட்டும். சுப காரியங்களுக்காகக் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், அது உங்களால் திருப்பிச் செலுத்தக்கூடிய அளவிலேயே இருக்கும். குழந்தைகள் வழியில் கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தைப் பொறுத்தவரை, புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமானது. கூட்டாளிகளுடனான புரிந்துணர்வு அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும்.

புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். அவை உங்களுக்கு அனுகூலத்தைத் தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை சரியாக திட்டமிட்டு கையாள்வதன் மூலம் எதிர்ப்புகளை முறியடிக்கலாம்.

பரிகாரம்

கன்னி ராசியினர் மகாலட்சுமி, அம்பிகை வழிபாடு செய்வது பொருளாதார மேன்மைக்கு வழிவகுக்கும். சனிக்கிழமைகளில் எள் சாதம் தயாரித்து காகத்திற்கு வைப்பது, கோவிலில் புளி சாதம் விநியோகம் செய்வது ஆகியவை உங்கள் கர்ம வினைகளைக் குறைக்கும்.

நண்பர்கள், வாழ்க்கைத் துணையின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பதும், அவர்களைப் புரிந்து கொண்டு செயல்படுவதும் கண்டகச் சனியின் தாக்கத்தைக் குறைக்கும். சனிக்கிழமைகளில் அம்பிகை சன்னதியில் நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நலம் தரும். பசுக்களுக்குப் பழங்களை, வெண் பூசணியை உணவாக வழங்குவது புண்ணியம் சேர்க்கும்.

துலாம்

பலன்கள்

துலாம் ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஒரு பொற்காலத்தின் தொடக்கமாகும். உங்கள் ராசிக்கு யோக கிரகமான சனி பகவான், இப்போது 6-ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு, உபஜய ஸ்தானத்திற்கு வருகிறார். இது ‘ருண விமோசன சனி’ என்று ஜோதிட ரீதியாக குறிப்பிடப்படும். அதாவது கடன், நோய் ஆகியவை தீரும் என அர்த்தம்.

6-ம் இடத்தில் சனி அமரும் போது உங்கள் எதிரிகள் உங்களுக்குப் பணியும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுதலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் நிலவி வந்த மந்தநிலை மாறி, உடல் தெம்பு அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். உங்கள் தைரியமும் வீரமும் இந்த காலகட்டத்தில் பலமடங்கு உயரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். உறவினர்களிடையே நிலவி வந்த கசப்பு உணர்வுகள் மாறும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவு அல்லது பழைய சொத்துக்கள் விற்பனை மூலம் கணிசமான தொகை கைக்கு வந்து சேரும்.

குழந்தைகளால் மகிழ்ச்சியும், அவர்களின் முன்னேற்றத்தால் பெருமையும் உண்டாகும். புதிய வீடு கட்டும் யோகம் அல்லது வீட்டைப் புதுப்பிக்கும் யோகம் துலாம் ராசியினருக்கு வலுவாக உள்ளது. இளைய சகோதரர்களுடனான உறவு பலப்படும். ஒரு சிலர் சொந்த வீடு கட்டுவதற்கும் காலம் கனிந்து உள்ளது.

தொழில் மற்றும் பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை தடையின்றி கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு பெரும் லாபம் ஈட்டுவீர்கள்.

போட்டியாளர்களை முறியடித்து முன்னேறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களால் உற்சாகமடைவார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் தொழில் லாபம் பெருகும்.

பரிகாரம்

துலாம் ராசியினர் சனிக்கிழமைகளில் கால பைரவரை வழிபாடு செய்வது மிகச்சிறந்த பலனைத் தரும். பைரவருக்கு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கடன் மற்றும் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். கருப்பு நாய்களுக்கு இரவில் உணவிடுவது நல்லது.

வாழ்வியல் ரீதியாக, மற்றவர்களைத் துச்சமாக நினைக்காமல் பணிவுடன் நடந்து கொள்வது சனியின் அருளை நிலைக்கச் செய்யும். சனிக்கிழமைகளில் கருப்பு உளுந்து தானம் செய்வதும், அன்னதானம் வழங்குவதும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். தினசரி வீட்டில் மங்கல இசையை ஒலிக்கச் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்.

விருச்சிகம்

பலன்கள்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஒரு நிம்மதியான சூழலை உருவாக்குகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த ‘அர்த்தாஷ்டமச் சனி’ இப்போது முடிவடைகிறது. உங்கள் ராசிக்கு 3 மற்றும் 4-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 5-ம் இடமான புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுவது சாதகமே.

இது பஞ்சமச் சனி என்று அழைக்கப்பட்டாலும், அர்த்தாஷ்டமச் சனியின் கொடுமைகளில் இருந்து இது பெரும் விடுதலையாகும். இதுவரை உங்களை வாட்டி வதைத்த மன உளைச்சல், குழப்பங்கள் மற்றும் குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் உங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வரும்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தவர்களுக்கு இப்போது புத்திர பாக்கியம் கைகூடும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பொருளாதார ரீதியாக, நல்ல வருமான முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு உயரும்.

இருப்பினும், 5-ம் இடத்தில் சனி இருப்பதால் பங்குச்சந்தை மற்றும் சூதாட்டம் போன்ற ரிஸ்க் நிறைந்த முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து உறவு பலப்படும். குலதெய்வ வழிபாடு மூலம் நற்பலன்களைப் பெறலாம்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வேலையில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும்.

புதிய தொழில் தொடங்குவதை விட ஏற்கனவே இருக்கும் தொழிலைச் சீரமைப்பதில் கவனம் செலுத்தினால் நல்ல லாபம் ஈட்டலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் விதத்தில் நடந்து கொள்வது முக்கியம்.

பரிகாரம்

விருச்சிக ராசியினர் சனிக்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு செய்வது விசேஷமாகும். சனிக்கிழமைகளில் சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வதும், நந்தியை வழிபடுவதும் நலம் தரும். நேர்மையான வழியில் பொருளீட்டுவதும், வாக்கு தவறாமல் நடப்பதும் சனியின் அருளைப் பெற்றுத் தரும்.

ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது உங்கள் பூர்வ புண்ணிய பலனை அதிகரிக்கும். சனிக்கிழமை தோறும் காலை நேரங்களில் விநாயகருக்குச் சிதறு தேங்காய் போடுவது தடைகளை நீக்கும்.

தனுசு

பலன்கள்

தனுசு ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி சில பொறுப்புகளையு,ம் சவால்களையும் ஒருசேரக் கொண்டு வருகிறது. உங்கள் ராசிக்கு 2 மற்றும் 3-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது ‘அர்த்தாஷ்டமச் சனி’ என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமச் சனி தரும் பாதிப்புகளில் பாதியளவு இக்காலகட்டத்தில் ஏற்படும்.

குறிப்பாகத் தாயாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதி என்பதால், பொருளாதார ரீதியாகப் பெரிய பாதிப்புகள் இருக்காது. மாறாகச் சொத்துச் சேர்க்கை, தன வரவு ஆகியவை உண்டாகும்.

குடும்பத்தில் சிறு குழப்பங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் தலைதூக்கலாம். பேச்சில் நிதானம் மிக முக்கியம். தேவையற்ற வாக்குவாதங்கள் பகையை உருவாக்கும். பொருளாதார நிலை உயர்வு இருக்கும். சிலருக்கு புதிய வீடு - நிலம் வாங்கும் யோகம் கைகூடும்.

பழைய வாகனத்தை விற்றுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஜாமீன் கையெழுத்து போடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும். வீட்டுப் பராமரிப்புக்காக அதிகப் பணம் செலவாகும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு மட்டுமே பலன் கிடைக்கும். குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணியிட மாற்றம் அல்லது வெளியூர் பயணம் உண்டு.

தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்யும் போது மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. வேலையில் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உங்கள் வளர்ச்சியை உறுதி செய்யும். வேலையில் இருப்பவர்களுக்குத் தற்காலிகமாக வேலைப்பளு காரணமாகக் குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.

பரிகாரம்

தனுசு ராசியினர் சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது அர்த்தாஷ்டமச் சனியின் வீரியத்தைக் குறைக்கும். இயன்றவரை சனிக்கிழமைகளில் 48 எள் தீபங்கள் ஏற்றி வழிபடுவது, புளியோதரை தானம் செய்வது ஆகியவை விசேஷமானது.

தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியம். சனி மற்றும் வியாழக்கிழமைகளில் காகங்களுக்குச் எள் கலந்த சாதம் வைப்பது மன அமைதி தரும். அரசமர பிள்ளையாருக்கு மஞ்சள் நிற மலர்மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.

மகரம்

பலன்கள்

மகர ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி கனவுகளை நிறைவேற்றித் தருவதாக அமைகிறது. கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களை வாட்டி வதைத்த ‘ஏழரைச் சனி’ இப்போது முழுமையாக முடிவுக்கு வருகிறது. சனி பகவான் உங்கள் ராசி நாதனாக இருப்பதால், இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு ராஜயோக பலன்களை வழங்கப் போகிறது.

இப்போது சனி பகவான் 3-ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு வருகிறார். இது ‘சகாயச் சனி’ எனப்படுகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த அனைத்துக் கஷ்டங்களுக்கும் இப்போது ஒரு விடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும், முகத்தில் ஒரு புதிய பொலிவும், உற்சாகமும் தோன்றும்.

குடும்ப வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் பெருகும். சகோதர, சகோதரிகள் வழியில் நல்ல உதவியும் ஆதரவும் கிடைக்கும். பொருளாதார நிலை மிகவும் வலுவடையும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். சேமிப்பு பலமடங்கு உயரும். சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.

மகர ராசியினருக்குப் புதிய ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்கும் யோகம் சித்திக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். இதுவரை பட்ட அவமானங்களுக்கு ஒரு விமோசனம் ஏற்படும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் கொடி உயர்ந்து பறக்கும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகி, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்குப் புதிய ஆர்டர்கள் வந்து குவியும்.

தொழிலை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்த இதுவே மிகச்சிறந்த தருணம். உங்களின் செயல்திறன் மற்றும் மேலாண்மைத் திறன் அனைவராலும் பாராட்டப்படும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.

பரிகாரம்

மகர ராசியினர் சனிக்கிழமைகளில் தாயாருக்கு தாமரை மாலை அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது. உங்கள் ராசி நாதனான சனி பகவானுக்குத் தைலாபிஷேகம் செய்து வழிபடுவதும் உங்கள் அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கும்.

வாழ்வியல் ரீதியாக, மற்றவர்களிடம் பணிவாக நடக்கும் பண்பை வளர்த்துக் கொள்வதும், சமூக சேவைகளை முன்னின்று செய்வதும் சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும். குலதெய்வத்தை சனிக்கிழமைகளில் வழிபடுவது தொழில் ரீதியான வெற்றிகளைத் தரும். ஏழைகளுக்குத் தயிர் சாதம் தானம் செய்வது மன நிம்மதி தரும்.

கும்பம்

பலன்கள்

கும்ப ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியின் இறுதிக்கட்டமான பாதச் சனியாக தொடங்குகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 2-ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு வருகிறார். இது ஏழரைச் சனியின் கடைசி கட்டம் என்பதால், கடந்த காலங்களில் நீங்கள் கற்ற பாடங்களை வைத்து வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டிய காலமாகும்.

ராசிக்கு 4, 8, 11 ஆகிய இடங்களை பார்க்கும் சனியால் பொருளாதார ரீதியாகப் பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. ஏனெனில் உங்கள் வார்த்தைகளே உங்களுக்குச் சில நேரங்களில் எதிர்ப்புகளை உருவாக்கும்.

குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வந்தாலும், விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதி காக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. பொருளாதார ரீதியாக, சுப காரியங்களுக்காகச் செலவுகள் அதிகமாகும். புதிய சேமிப்புகளைத் தொடங்குவது எதிர்காலத்திற்குப் பாதுகாப்பைத் தரும்.

கண்கள் அல்லது பற்கள் தொடர்பான சிறிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் கறாராக இருப்பது நல்லது. எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உழைப்பு அதிகமாக இருக்கும். வருமானத்திற்குப் பஞ்சமிருக்காது, ஆனால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் பிறரைப் பற்றி எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிப்பது கூடாது. அமைதி காக்கவும்.

தொழிலதிபர்கள் புதிய முதலீடுகளைச் செய்யும் போது நிதானமாகச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதில் தடை-தாமதங்கள் ஏற்படலாம். ஆனால், இறுதியாக வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக்கொள்வது அவசியம்.

பரிகாரம்

கும்ப ராசியினர் சனிக்கிழமைகளில் பிள்ளையார் வழிபாடு செய்வதுடன், சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி சிவபெருமானை வலம் வந்து வழிபட வேண்டும். ஏழைகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளைத் தானமாகக் கொடுப்பதும் பல தோஷங்களை நீக்கும்.

வாழ்வியல் ரீதியாக, அதிகமான பேச்சுகளைக் குறைத்துக் கொண்டு செயலில் வேகம் காட்டுவது வெற்றி தரும். பெரியோர்களை வணங்கி, மதித்து நடப்பது சனியின் அருளை உங்களுக்கு முழுமையாகப் பெற்றுத் தரும். பசுக்களுக்கு வெல்லம் கலந்த அரிசியை ஊட்டுவது குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டும்.

மீனம்

பலன்கள்

மீன ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டமான ‘ஜென்மச் சனியாக’ தொடங்குகிறது. உங்கள் ராசிக்கு 11 மற்றும் 12-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே அமர்கிறார். இது ஒரு பொறுப்புகள் நிறைந்த காலமாகும். அவரது பார்வை 3, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் பதிகிறது.

நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய குடும்ப மற்றும் தொழில் கடமைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது மந்தநிலை ஏற்படும். எனவே உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் தேவை. அலைச்சல்கள் அதிகரித்தாலும், உழைப்பிற்கேற்ற உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும்.

குடும்ப உறவுகளில் பொறுமை காப்பது மிகவும் அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்த்து, அவர்களை அரவணைத்துச் செல்லவும். பொருளாதார ரீதியாக, செலவுகள் அதிகமாக இருந்தாலும், உங்களின் சமயோசித புத்தியால் பற்றாக்குறை நிலைமையைச் சமாளிப்பீர்கள்.

மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஆன்மீகத்தல பயணங்கள் மற்றும் தான தர்மங்களில் ஈடுபடுவது நல்லது. வரும் ஜூன் மாதம் கடகத்தில் சஞ்சரிக்கும் உச்ச ராசிநாதனால் பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற சுபச் செலவுகள் ஏற்படும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். வேலையில் கூடுதல் சுமை இருந்தாலும், உங்கள் திறமை மேலதிகாரிகளால் கவனிக்கப்படும். சோம்பலைத் தவிர்த்துச் சுறுசுறுப்பாகச் செயல்படுவது உங்கள் வளர்ச்சிக்கு முக்கியமானது.

தொழிலதிபர்கள் புதிய மாற்றங்களைச் செய்யும் போது அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். கூட்டுத் தொழிலில் சில சவால்கள் வந்தாலும், நேர்மையான அணுகுமுறை வெற்றியைக் கொடுக்கும். உங்களின் உழைப்பு மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் காலம் இது.

பரிகாரம்

மீன ராசியினர் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபடுவது ஜென்மச் சனியின் பாதிப்பைக் குறைக்கும். சனிக்கிழமைகளில் மீன்களுக்கு பொரி அல்லது கோதுமை உருண்டை அளிப்பதும், எறும்புகளுக்கு பச்சரிசி வைப்பதும் மிகச்சிறந்த பரிகாரமாகும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் நிதானமாகச் செயல்படுவது அவசியம். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், முதியவர்களுக்கு உதவுவதும் உங்கள் வாழ்வை வளமாக்கும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, கருவறையை வலம் வந்து வழிபடுவது நன்மை தரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com