பள்ளிக்கரணையில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு சோதனை ரூ.1¼ லட்சம் சிக்கியது
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வாரிசு, சாதி உள்பட சான்றிதழ்கள் பெற லஞ்சம் வாங்குவதாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென பள்ளிக்கரணை கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் நந்த குமார், கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது பற்றி கிராம நிர்வாக அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

