

மும்பை,
மும்பை சர்ச்கேட்டை சேர்ந்தவர் ஜாம்ஷேட் (வயது52). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் மூலம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். 2 பேரும் நட்பாக பழகி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் மும்பைக்கு சுற்றுலா வந்தார். அப்போது அவர் கட்டணம் செலுத்தி (பேயிங் கெஸ்ட்) ஜாம்ஷேட்டின் வீட்டில் தங்கினார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று பணப்பிரச்சினை தொடர்பாக 2 பேருக்கு இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜாம்ஷேட் வெளிநாட்டு பெண்ணை தாக்கி, மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் மெரின்லைன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு பெண்ணை தாக்கி மானபங்கம் செய்ததாக ஜாம்ஷேட்டை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.