

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தது.
ஆடி திருவிழா
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 189-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பு பணிவிடையும் நடந்தது.
தினமும் மாலையில் புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.
தேரோட்டம்
விழாவின் சிகர நாளான நேற்று மாலையில், சிறிய தேரில் அய்யா எழுந்தருளி, பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், துணை தலைவர் அய்யாபழம், செயலாளர் பொன்னுதுரை, துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, கணேசன், த.பாலகிருஷ்ணன், செல்வகுமார், எஸ்.பாலகிருஷ்ணன், ரத்தினபாண்டி, சுதேசன், சங்கரன், உறுப்பினர்கள் சுப்பையா, ஹரிகிருஷ்ணன், கண்ணன், வினோத், வேல்குமார், தொழில் அதிபர் இளவல் எஸ்.அன்பழகன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற ஆயுட்கால உறுப்பினர் அம்பிகண்ணன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, பதியை சுற்றி வலம் வந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் புஷ்ப வாகனத்தின் மீது அமர்ந்தது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மனமுருக வேண்டினர்.