கப்பல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்

புதுவையில் முன்விரோத தகராறில் கப்பல் அதிகாரி மீது மீண்டும் தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கப்பல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்
Published on

அரியாங்குப்பம்

முன்விரோத தகராறில் கப்பல் அதிகாரி மீது மீண்டும் தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கப்பல் அதிகாரி

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் துறைமுக ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 29). இவர் கப்பலில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். தற்போது 5 மாத விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இவருடன் அதே பகுதியை சேர்ந்த நானேஸ்வரன் என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவரும் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் வேலை செய்யும் இடத்தில் கருத்துவேறுபாடு இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன் வீராம்பட்டினம் கோவில் தெப்பக்குளம் அருகே நின்ற கவுதம்ராஜை நானேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து தாக்கினர். இது தொடர்பாக நானேஸ்வரன் உள்பட 3 பேர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வந்தனர். இதற்கிடையில் அவர்கள் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று விட்டனர்.

மீண்டும் தாக்குதல்

இந்தநிலையில் நேற்று வீராம்பட்டினம் தேரோடும் வீதியில் கவுதம்ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நானேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், யுனதன் ஆகியோர் கவுதம்ராஜியிடம் மீண்டும் தகராறு செய்து, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த தாக்குதல் தொடர்பாக அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், வசந்தகுமார், யுனதன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசில் புகார் அளித்த கப்பல் அதிகாரி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வீராம்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com