

தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவைபட்டி மொட்டகோபுரம் கடற்கரையில் கியூபிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு மினி லோடு வாகனத்தில் சுமார் 30 கிலோ எடையுள்ள 39 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்து.
இதனையடுத்து கியூ பிரிவு போலீசார் அந்த பீடி இலைகளை பறிமுதல் செய்து, இது தொடர்பாக தாளமுத்துநகர், வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சோலையப்பன் மகன் மாரீஸ்குமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய, பைபர் படகுடன் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.