மூதாட்டியிடம் கைப்பை பறித்த சிறுவன் கைது

புதுவை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கைப்பை பறித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்ததில் மது குடிக்க பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மூதாட்டியிடம் கைப்பை பறித்த சிறுவன் கைது
Published on

புதுச்சேரி

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கைப்பை பறித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்ததில் மது குடிக்க பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மூதாட்டி

புதுச்சேரி தென்னஞ்சாலை ரோடு சஞ்சய் காந்தி நகர் டாக்டர்ஸ் காலனியை சேர்ந்தவர் சிந்தியா (வயது70). இவர்களது மகன், மகள் ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். சிந்தியா வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை மறைமலையடிகள் சாலையில் உள்ள அந்தோணியார் தேவாலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தென்னஞ்சாலை ரோட்டில் நடந்து சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சிந்தியா அணிந்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். அந்த பையில் செல்போன் மற்றும் ரூ.1,000 ரொக்கம் இருந்தது.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் அந்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து அதன் உரிமையாளர் விவரத்தை திரட்டினர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் புதுவை உப்பளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து கைப்பை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் அந்த சிறுவன் மதுகுடிக்க பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com