

வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன. மேலும் வலங்கைமான் நகர பகுதி தேர்வுநிலை பேரூராட்சியாக செயல்படுகிறது. ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்சமயம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து பணிகளுக்குமான நிதி ஒதுக்கீடு, பணிகளின் விவரம் மற்றும் நோக்கம் குறித்த அறிவிப்பு பலகைகள் பணிகளை மேற்கொள்ளும் பகுதிகளில் நிரந்தரமாக வைப்பதற்கு உத்தரவிட்டு அதற்கான நிதிகளையும் தனியாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வலங்கைமான் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் விவரங்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்பில் சிமெண்டால் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெருங்குடி, அரிவாரமங்கலத்தில் அமைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.