

புதுடெல்லி,
இந்தியாவின் முன்னணி தொழில்நிறுவனமான அதானி குழுமம், ஆயுத தளவாடங்களை தயாரிக்கும் அதானி டிபென்ஸ் நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவிலேயே ராணுவத்துக்குத் தேவையான சில ஆயுத தளவாடங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக 'பிரஹார்' என்ற பெயரில் இலகு ரக எந்திர துப்பாக்கிகளை தயாரித்து வந்தது. தற்போது முதல் தொகுப்பாக 2 ஆயிரம் இலகு ரக துப்பாக்கிகளை தயாரித்துள்ள அதானி டிபென்ஸ் நிறுவனம் அவற்றை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. 7.62 மி.மீ. அளவு கொண்ட இந்த துப்பாக்கி, மத்தியபிரதேசத்தின் குவாலியர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
2 ஆயிரம் துப்பாக்கி களை முறைப்படி ராணுவத்திடம் ஒப்படைக்கும் விழா நேற்று அந்த நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதில் ராணுவ அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு தலைமை இயக்குனர் ஏ.அன்பரசு, அதானி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ராஜ்வன்ஷி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலகு ரக துப்பாக்கிகளை பெற்று ராணுவ சரக்கு வாகனங்களில் ஏற்றி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பை அதிகாரி அன்பரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆஷிஷ் ராஜ்வன்ஷி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாங்கள் ஒப்பந்த காலத்தைவிட 11 மாதங்க ளுக்கு முன்பாகவே இவற்றை ஒப்படைத்துள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் ஒப்பந்தப்படி மொத்த துப்பாக்கிகளும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.