

நொய்யல்
லாரி மீது கார் மோதல்
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கணபதி சுப்பிரமணியம் (வயது 55). இவரது நண்பர் பெங்களூருவைச் சேர்ந்த சங்கர் (56) ஆகிய 2 பேரும் பெங்களூருவில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அதே காரில் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அந்த கார் கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரியை கார் முந்தி செல்ல முயன்ற போது நிலைதடுமாறி லாரியின் பக்கவாட்டில் திடீரென மோதி, லாரியின் முன்னால் சென்று குறுக்கே நின்றது. கார் பலமாக அடிபட்டதால் அனைத்து செயல்பாடுகளும் நின்று லாக் ஆகிவிட்டது. இதனால் காரை முன்னும் பின்னும் நகர்த்த முடிவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த வழியாக வந்த பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பாலம் நெடுகிலும் நீண்ட வரிசையாக நின்று கொண்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கிரேன் எந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். இந்த சம்பவத்தால் காவிரி ஆற்று பாலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.