

மும்பை,
நவிமும்பையை சேர்ந்த 36 வயது பெண் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக வரண் தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கு நவிமும்பை கார்கர் பகுதியை சேர்ந்த ஹிம்மத்சிங் (வயது35) என்பவர் அறிமுகம் ஆனார். ஹிம்மத்சிங் ராணுவ உளவு பிரிவான 'ரா'வில் வேலை பார்ப்பதாக கூறினார். இதை நம்பிய அப்பெண், அவரை 2021-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு ஹிம்மத்சிங் பெண்ணிடம் இருந்து ரூ.3 லட்சம் பெற்றார். பின்னர் அவரது நகைகளையும் வாங்கி ரூ.4 லட்சத்துக்கு அடகு வைத்தார். ஹிம்மத்சிங் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்ததும், அதை மறைத்து 36 வயது பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததும் சமீபத்தில் தெரியவந்தது. மேலும் அவர் ராணுவத்தில் பணியாற்றவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கார்கர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட ஹிம்மத்சிங் மீது மோசடி, முதல் திருமணத்தை மறைத்தல், அரசு ஊழியர் என கூறி ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.