

மும்பை,
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை 30-ந் தேதி வரை சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது.
கோர்ட்டில் ஆஜர்
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 29 ஆண்டுக்கு பிறகு தலைமறைவாக இருந்த அபுபக்கர், சையத் குரோஷி, சோயிப் குரோஷி மற்றும் யூசாட் பட்கா ஆகியேர் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது சி.பி.ஐ. வக்கீல் தீபக் சால்வி ஆஜராகி வாதிடுகையில், "பிடிபட்ட 4 பேருக்கும் முக்கிய சதிகாரரான தாவூத் இப்ராகிமுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளில் ஒருவரான சையத் குரோஷி பாகிஸ்தானில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கையாள பயிற்சி பெற்றதும், சதி மற்றும் குண்டுவெடிப்புக்கான கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சி.பி.ஐ. காவல்
எனவே அவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சி.பி.ஐ. கோரியது. ஆனால் கைதானவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் சி.பி.ஐ. கோரிக்கையை ஏற்க கூடாது என்று வாதிட்டார்.
இரு தரப்பு விவாதத்தை கேட்ட நீதிபதி வருகிற 30-ந் தேதி வரை சி.பி.ஐ காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.