2-வது திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை கொடுமைப்படுத்திய பெண், கணவருடன் கைது

2-வது திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை கொடுமைப்படுத்திய பெண், கணவருடன் கைது

குடியாத்தத்தில் 2-வது திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளை கொடுமைப்படுத்திய பெண், கணவருடன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
Published on

குடியாத்தம்,

குடியாத்தம் அருகே உள்ள ராஜாகோயில் அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் கணேஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி கவிதா (வயது 26). இவர்களுக்கு மகாலட்சுமி (11) என்ற மகளும், கார்த்தி (10) என்ற மகனும் உள்ளனர். கணேஷ் இறந்ததை அடுத்து கவிதாவுக்கு, கோபி (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் கோபியை கவிதா 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் குழந்தைகளை தொடர்ந்து இருவரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் கவிதா, தனது மகள் மகாலட்சுமி வீட்டு வேலை செய்யவில்லை என திட்டி சுடுதண்ணீரை அவள் மீது ஊற்றியுள்ளார்.
இதில் மகாலட்சுமியின் தொடை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் மகன் கார்த்தியின் முதுகில் சூடு வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மகாலட்சுமியும், கார்த்தியும் அழுதுகொண்டே வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவர்கள் நடந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் தெரிவித்தனர்.

கைது

இதனையடுத்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நாகூரான் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை கொடுமைப்படுத்திய கவிதாவையும், கோபியையும் கைது செய்தனர்.

மேலும் குழந்தைகளை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சமூகநலத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com