சாக்லேட் தயாரிப்பில் பணமும்.. புகழும்..

பிரகதி சாவ்னி, ஒரு பல் மருத்துவர். ஆனால் அவருக்கு சாக்லேட் தயாரிப்பில் காதல். எனவே, ‘சாக்ரிதி சாக்லேட்ஸ்’ என்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி விட்டார்.
சாக்லேட் தயாரிப்பில் பணமும்.. புகழும்..
Published on

டெல்லி அருகே குருகிராமில் உள்ள பிரகதியின் சாக்லேட் தயாரிப்பகத்தினுள் நுழைந்தால், கலவையான, சுகமான வாசம் நாசியை நிறைக்கிறது. மல்லிகை, ரோஜா, லாவண்டர், வெனிலா, வெற்றிலை, ஸ்ட்ராபெர்ரி என்று பலவகையான வாசங்கள் நாசி வழியே மனதை தூண்டுகின்றன. தெர்மாமீட்டர்கள், தட்டுகள், தட்டைக் கரண்டிகள், சாக்லேட் கலவையை வார்க்கும் மோல்டுகள் போன்றவையும் கண்ணில் படுகின்றன.

நான் உண்மையான பிளேவரை பிரித்து எடுத்து, என்னுடைய ரகசிய சேர்மானங்களுடன் சேர்க்கிறேன் என்று கண்சிமிட்டுகிறார், பிரகதி.

தொடர்ந்து அவரே, நான் இனிப்பூட்டிகள், கெடாமல் காக்கும் வேதிப்பொருட்கள், செயற்கை வண்ணங்கள், பால் என்று எதையும் சேர்ப்பதில்லை. அதனால்தான் என்னுடைய சாக்லேட்கள் அவற்றின் இயற்கையான இனிப்புத்தன்மையை தக்கவைத்துக் கொள்கின்றன. அவற்றின் மணமும், சுவையும் இயற்கையாக இருக்கிறது. நான் வடித்தெடுத்த பிளேவரை கூழ்மநிலை சாக்லேட்டில் சேர்க்கிறேன். அது சாக்லேட்டின் மையப் பகுதியில் இடம்பெறுகிறது என்றும் விளக்கு கிறார்.

புதிய சுவை, மணத்தை வழங்குவதற்காக பிரகதி ஒரு நீண்ட ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார். அதன் விளைவாக, தற்போது 45 வித்தியாசமான சுவைகளை அறிமுகம் செய் திருக்கிறார். அவற்றில், லாவண்டர், கிரீன் டீ, ஒருவகை காளான், ஆரஞ்சு டீ சுவைகள் அடக்கம். இந்திய சுவைகளில், பனாரஸ் பான், லெமன் கிராஸ், காஜு குல்பி போன்றவை உண்டு.

சாக்லேட் தயாரிப்பு என்ற இனிப்பான தொழிலில் இறங்கியிருக்கும் புது முகம், பிரகதி மட்டுமல்ல. டெல்லியைச் சேர்ந்த ராதிகா குலாத்தியும் கை தயாரிப்பு சாக்லேட்களை உருவாக்கி வருகிறார். நூறு சதவீதம் பெல்ஜியம் சாக்லேட்டை பயன்படுத்தும் இவர், அதில் பாதாம், கேரமல் போன்றவற்றைச் சேர்க்கிறார்.

தனது ஸ்பெஷல் சாக்லேட்டாக ராதிகா கூறுவது, கிரீம் அடுக்குகளுக்கு இடையே பாதாம், தூய கேரமல், வெனிலா ஆகியவை சேர்த்த டார்க் சாக்லேட்டை.

24 வயதாகும் ராதிகா, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சாக்லேட் தயாரிப்பாளரிடம் பயிற்சி பெற்றிருக்கிறார். தொழில் நிர்வாக மாணவியான இவர், மாணவர் பரிமாற்றத் திட்டம் ஒன்றில் இங்கிலாந்து சென்றிருந்தபோது அங்கு கிடைத்த உபரி நேரத்தை இப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அங்குதான், ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், காபி, கொட்டைப் பருப்புகள் போன்றவற்றை சரிவிதத்தில் கலக்கும் வித்தையை ராதிகா கற்றாராம்.

படிப்பை முடித்த ராதிகாவுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. அங்கு வேலை பார்த்த படியே, வார இறுதிகளில் சாக்லேட் தயாரிப்பைத் தொடருகிறார்.

ஆரம்பத்தில் இவர் தயாரித்த சாக்லேட்களை ருசித்த குடும்பத்தினர், நண்பர்கள் அளித்த உற்சாகத்தில், ரோசார்ட்டே சாக்லேட் நிறுவனத்தை கடந்த 2016-ம் ஆண்டு ராதிகா தொடங்கினார்.

தற்போது, புதுடெல்லி சாந்திநிகேதன் பகுதியில் அடுக்குமாடிக் குடி யிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள ராதிகா வீட்டு சிறு சமையலறையே சாக்லேட் தயாரிப்பகம். இவர், பால், முட்டை கலக்காத சாக்லேட்களையும், மதுபானம் கலந்த சாக்லேட்டுகளையும் கூட தயாரிக்கிறார்.

ஜாவா, மடகாஸ்கர், கானா போன்ற நாடுகளில் இருந்து உயர்தரமான கோக்கோவை, தருவித்துப் பயன்படுத்துவதாக ராதிகா கூறுகிறார். பலவித மூலப்பொருட்களை தனது பிரத்யேக முறையில் கலந்து சாக்லேட்களை உருவாக்குவதாக இவர் பெருமிதம் தெரிவிக்கிறார்.

பிரகதி, ராதிகா போல மற்றொரு சாக்லேட் பெண், கீத்தனா சிங். இவர் தனது கோகோ பார்க் சீரிஸ் நிறுவனத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் சாக்லேட்களை தயாரித்து வழங்குவதாகச் சொல்கிறார்.

பேக்கரி ஒன்றையும் நடத்தும் கீத்தனா, முழுநேர சாக்லேட் தயாரிப்பாளர் அல்ல. ஆனாலும் சாக்லேட் பிரியர் களின் திருப்தியில் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறார்.

திடீரென்று ஒருவர், தனக்கு ஆரஞ்சு சுவையில், பாதாம் கலந்த சாக்லேட் வேண்டும் என்றாலும் உடனே தயாரித்துக் கொடுத்துவிடுவேன். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் புதுமையான விருப்பத்தை நிறைவு செய்யும் அதேநேரம், என்னாலும் புதிய சோதனை முயற்சிகளில் இறங்க முடிகிறது என்று கீத்தனா சொல்கிறார்.

டார்க், ஒயிட், மில்க் மற்றும் சர்க்கரையில்லாதது என்று அடிப்படை சாக்லேட்களை வாடிக்கையாளர்கள் விரும்பிய பிளேவரில் கீத்தனா தயாரித்துக் கொடுக்கிறார்.

இவர்களைப் போன்ற சாக்லேட் தயாரிப்பு தோழர்கள், விகாஷும், பிரவீண் குரோவரும். பால்யகால நண்பர்களான இவர்கள், தங்கள் வேலைகளைத் துறந்துவிட்டு சாக்லேட் தயாரிப்பையே முழுநேரப் பணியாக்கிவிட்டார்கள். அதற்கென, பாரீஸ் என்ற நிறுவனத்தை இவர்கள் நடத்துகின்றனர்.

கூடு போன்ற உட்பகுதியில் மென்மையான சாக்லேட்டை நிரப்பித் தயாரிப்பது இவர்களின் சிறப்பு. 20 வித்தியாசமான பிளேவர்களில் தாங்கள் சாக்லேட்டை தயாரிப்பதாக விகாஷும், பிரவீணும் கூறுகின்றனர். விலங்குப் பொருட்கள் சேர்க்காத வீகன் சாக்லேட் களையும், சர்க்கரையில்லாத சாக்லேட்களையும் தயாரித்து அளிப்பதாகவும் இவர்கள் சொல்கின்றனர்.

நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர்கள், முத்திரைகள், ஏன், படங்களைக்கூட சாக்லேட்களில் பொறித்துத் தருவது இவர்களது ஸ்பெஷாலிட்டி. சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது, எங்கள் குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழ்வது போலிருக்கிறது என்று முகம் மலர்ந்து சொல்கிறது, விகாஷ்- பிரவீண் ஜோடி.

மற்றொரு இனிய தத்துவத்தையும் அவர்கள் உதிர்க்கின்றனர், வாழ்க்கை என்பது பலவித சாக்லேட்கள் அடங்கிய ஒரு பெட்டி. நமக்கு என்ன சாக்லேட் கிடைக்கப் போகிறது என்பது நமக்கே தெரியாது!

சரிதான்!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com