

திருவனந்தபுரம்,
மலையாள நடிகர் சங்கமான "அம்மா" அமைப்பில் தனக்கு எதிராக பெரிய சதி நடப்பதாக "திரிஷ்யம்" பட நடிகை அன்சிபா ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். அம்மா அமைப்பின் இணை செயலாளராக இருந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு நடிகர் டினி டாம் தான் காரணம் என்று அன்சிபா ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அன்சிபா ஹாசன் கூறியதாவது: கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு மத நிறுவனம் ஸ்பான்சர் செய்வதை எதிர்த்ததால், நடிகர் டினி டாம் தன் மீது மதச்சாயம் பூசி திரைத்துறையில் அவதூறு பரப்பினார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அம்மா குடும்ப விழாவிற்கு முந்தைய நாள் இரவு நடிகை நீனா குறூப் என்பவரை தகாத வார்த்தைகளால் பேசி அடிக்க முயற்சித்தார் அங்கிருந்தவர்கள் அதை தடுத்ததால் நீனா குரூப் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தார்.
இது குறித்து நான் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதற்கு தலைவர் ஸ்வேதா மேனன் இது சங்கத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம் என்று அலட்சியம் காட்டினார். இதை தொடர்ந்தே சங்கத்தின் பொறுப்பிலிருந்து விலகினேன்” என்றும் கூறியுள்ளார். அன்சிபா ஹாசனின் இந்த குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.