பிலிம்பேர் மேடையின் முதல் வரிசையில் அமர 13ஆண்டுகள் - சிவகார்த்திகேயன்

‘அமரன்’ படம் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
பிலிம்பேர் மேடையின் முதல் வரிசையில் அமர 13ஆண்டுகள் -  சிவகார்த்திகேயன்
Published on

70-வது தென்னிந்திய பிலிம்பேர் விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது.

இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “இந்த பிலிம்பேர் விருது தான் எனது முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன். அவர் தான் 'சும்மா வா... ஜாலியாக போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் இருக்கிறது.

‘அமரன்’ படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது 'அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்' என்று சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி.இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான பிலிம்பேர் விருதுகளை பார்த்தேன். அப்போது 'அமரனுக்காக எனக்கும் கிடைக்கும்' என்று நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது.

எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும், மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று பிலிம்பேர் விருதுடன் மேடையில் நிற்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com