21 பேர் கைது... ஆனாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் - நடிகை ரம்யா உறுதி

நடிகை ரம்யாவுக்கு எதிராகவும், அவதூறாக விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 பேர் கைது... ஆனாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் - நடிகை ரம்யா உறுதி
Published on

பெங்களூரு,

சமூக வலைதளங்களில் ஆபாசமாக விமர்சித்து அவதூறு பரப்பிய வழக்கில் 21 பேர் கைதான நிலையில், இதுபற்றி நிருபர்களிடம் பேசிய நடிகை ரம்யா கையில் செல்போன் இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசவார்களா?, ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சிக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ரம்யா

கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரம்யா. இவர் காங்கிரஸ் முனனாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். தற்போது அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர், திரைப்படங்களில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். அப்போது நடிகர் தர்ஷனுக்கு எதிராகவும், இந்த வழக்கில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையை பாராட்டியும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தள பக்கத்தில் நடிகை ரம்யா கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இதையடுத்து நடிகை ரம்யாவுக்கு எதிராகவும், அவதூறாக விமர்சித்தும், ஆபாசமாகவும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.

வழக்கை வாபஸ் பெற கோரிக்கை

இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை ரம்யா இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நடிகை ரம்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 21 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பெங்களூரு 6-வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று வழக்கில் கைதான 21 பேரின் குடும்பத்தினர் பெங்களூருவில் நடிகை ரம்யாவை சந்திக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

அதையடுத்து அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தனர். அப்போது மன்னிப்பு கோரிய அவர்கள், தங்கள் பிள்ளைகள் தவறு செய்துவிட்டனர், இனி இதுபோல் நடக்காது, இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து வழக்கை நடிகை ரம்யா வாபஸ் பெற வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்தனர்.

கையில் செல்போன் இருந்தால்...

ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நடிகை ரம்யா இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், 'இது அவர்களுக்கு மட்டுமல்ல, பெண்களை இழிவாக பேசும், பேச நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைய வேண்டும். நான் எந்த காரணத்தை கொண்டும் வழக்கை வாபஸ் பெற மாட்டேன். கையில் செல்போன்களை வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் யாரை வேண்டுமானாலும் அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து வருவது சரியல்ல.

ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சிக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். இது எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். கையில் செல்போன் இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசவார்களா?. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கோர்ட்டுக்கு வந்து சாட்சி அளிக்க கூறியும் அவர்கள் இதுவரையில் வரவில்லை. இப்போது வந்திருக்கிறார்கள்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com