

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தனது காதலி கவுரி ஸ்ப்ராட்டை மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அமீர் கான், தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமீர் கான், "ஜூலை 5-ஆம் தேதி நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். எங்கள் இல்லத்திலேயே திருமணம் நடைபெறும். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்துகொள்வார்கள். எங்களுடைய திருமணத்திற்கு உங்களுடைய அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும். உங்கள் ஆசியுடன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார். அப்போது அவரது மகன் ஜுனைத் கானும் உடனிருந்தார்.
கவுரி ஸ்ப்ராட், பெங்களூருவைச் சேர்ந்தவர். லண்டனில் பேஷன் மற்றும் ஸ்டைலிங் படிப்பை முடித்துள்ள அவர், தற்போது மும்பையில் சலூன் ஒன்றை நடத்தி வருவதுடன், அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 60-வது பிறந்தநாளின் போது அமீர் கான், கவுரியை ஊடகங்களுக்கு தனது துணையாக அறிமுகப்படுத்தினார்.
பாலிவுட்டின் வழக்கமான ஆடம்பரத் திருமணங்களைப் போலன்றி, அமீர் கான் - கவுரி ஸ்ப்ராட் திருமணம் முற்றிலும் தனிப்பட்ட முறையில் திட்டமிடப்பட்டு, அமீர் கான் மற்றும் கவுரி ஸ்ப்ராட் ஜோடி இன்று முறைப்படி தங்களது திருமணத்தைப் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, அங்கு வருகை தரும் 100 முதல் 150 நெருங்கிய விருந்தினர்களுக்கு மணமக்களுக்குப் பிடித்த உணவுகளுடன் கூடிய பிரத்யேக மதிய விருந்து வழங்கப்பட்டது.
இது அமீர் கானின் மூன்றாவது திருமணமாகும். அமீர் கானுக்கு அவரது முதல் மனைவி ரீனா தத்தா மூலம் பிறந்த ஜூனைத் கான், ஈரா கான் மற்றும் இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் பிறந்த ஆசாத் ராவ் கான் ஆகிய மூன்று பிள்ளைகளும், கவுரி ஸ்ப்ராட்டுக்கு அவரது முந்தைய திருமணம் மூலம் பிறந்த ஒரு மகனும் இந்தத் திருமண நிகழ்வுகளில் முன்னின்று பங்கேற்கின்றனர். தற்போது அமீர் கானின் பாலி ஹில் இல்லம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திருமணக் கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன.