4 மாதங்களுக்கு முன்பு மாயமானவர்... மரப்பெட்டிக்குள் இருந்து நடிகர் பிணமாக மீட்பு

4 மாதங்களுக்கு முன்பு மாயமானவர்... மரப்பெட்டிக்குள் இருந்து நடிகர் பிணமாக மீட்பு
Published on

பிரபல பிரேசில் நடிகர் ஜெபர்சன் மச்சாடோ. இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பிரேசில் தலைநகர் ரியோ டிஜெனிரோவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் ஜெபர்சன் மச்சாடோவை காணவில்லை. இதுகுறித்து போலீசில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அவரை பல இடங்களில் தேடியும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சமீபத்தில் ஜெபர்சன் மச்சாடோ செல்போனில் இருந்து குறுஞ்செய்திகள் வந்ததாகவும் அதில் எழுத்துப்பிழைகள் அதிகம் இருப்பதால் எனது மகன் அனுப்பியது இல்லை என்றும் அவரது தாய் மரியா தாஸ் போலீசில் தெரிவித்தார். இந்த நிலையில் 4 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு தற்போது ஜெபர்சன் மச்சாடோவை போலீசார் பிணமாக மீட்டு உள்ளனர்.

நடிகர் ஜெபர்சன் மச்சாடோவுக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு மரத்தடியின் கீழ் 6.5 அடி ஆழத்தில் ஒரு மரப்பெட்டிக்குள் உடலை வைத்து சங்கிலியால் பிணைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

அதே தோட்டத்தில் வாடகைக்கு குடியிருந்தவர் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அவரை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com